பிளஸ் 2 மறுகூட்டல், மதிப்பீடு நாளை முடிவு வெளியீடு
கருத்துகள்
சென்னை: பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் திருத்தம், மறுகூட்டல் செய்ய விண்ணப்பித்த மாணவர்களின் தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் என்று தெரிகிறது. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த மே மாதம் வெளியிடப்பட்டது. இந்த தேர்வில் மறு கூட்டலுக்கு 70000 பேர் விண்ணப்பித்தனர். அனைவருக்கும் முதலில் விடைத்தாள் நகல்கள் அனுப்பி வைக்கப்பட்டன. அதைப் பெற்ற பிறகு மறுகூட்டல் செய்வது, மறு மதிப்பீடு செய்வதற்கு விண்ணப்பித்தனர். அதில் 2000 பேர் கணக்கு மற்றும் இயற்பியல் பாடங்களுக்கு மறு மதிப்பீடு செய்ய விண்ணப்பித்திருந்தனர். இவர்களின் விடைத்தாள்கள் மட்டும் சென்னையில் உள்ள மாநில பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் திருத்தப்பட்டு வருகின்றன.
வரும் 5ம் தேதி பொறியியல் கவுன்சலிங் நடத்தப்படுகிறது. அதற்குள் பிளஸ் 2 மறு மதிப்பீட்டில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை அனுப்பி வைக்க வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தேர்வுத் துறையிடம் கேட்டுக் கொண்டுள்ளது. எனவே மறுகூட்டல், மதிப்பீடு முடிவுகள் நாளை வெளியாகும் என்று தெரிகிறது. நாளை மாலைக்குள் மறுமதிப்பீட்டு மதிப்பெண்கள் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு அனுப்பிவைக்கப்படும். இதையடுத்து ரேங்க் பட்டியலில் மாற்றம் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.






















முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!